Saturday, July 31, 2010

மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது.

சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது.
இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.
கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார்.
இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும், பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாத ஒரு இடமாகும். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்.