Thursday, January 12, 2012

அளவுக்கு மீறிய உடற்பயிற்சி ஆபத்து : டாக்டர்கள் எச்சரிக்கை

உடல் பருமனை குறைக்க மருத்துவர்களால் பல வழிகள் பரிந்துரைக்கப்படுவது வாடிக்கை. உடற்பயிற்சிகள் இதில் தவிர்க்க இயலாதது. மிகக் குறைந்த பட்சமாக நடை பயிற்சி நிச்சயம் இருக்கும். இந்நிலையில், உடல் பருமன் மற்றும் அதனை குறைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் செய்தால் அடிக்கடி ஜலதோஷம், சளி பிரச்னை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. உடல்பருமனை கட்டுப்படுத்த மட்டுமின்றி ஆரோக்கியத்தை பேணவும் உடற்பயிற்சி அவசியம். ஆனால் அது அளவோடு இருப்பது அத்தியாவசியம். இங்கிலாந்தில் உள்ள லோபரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவல் இது. அதன் விவரம் வருமாறு: தினசரி நடை பயிற்சி மேற்கொள்வது உடல் பருமன் குறைப்பு, ஆரோக்கியம், நோய்த்தாக்குதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அனைத்து வயதினரும் தினசரி 30 நிமிட நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இவை சாத்தியமாகிறது. 
குறிப்பாக ஜலதோஷம் மற்றும் சளி பிரச்னையில் இருந்து 30 சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. மாறாக, ஓட்டம் போன்ற அதிவேக செயல்பாடுகளுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது. ஒரு உறுப்பு ஒத்துழைக்க மறுத்தாலும் அது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எதுவாக இருந்தாலும் அளவோடு செய்ய வேண்டும். மருத்துவ அறிவுரையுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனடாவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வோ, உடல் பருமன் குறைப்பில் ஈடுபடுபவர்கள் உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட தங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் முதலில் பட்டியலிட வேண்டும். அடுத்த கட்டமாக அதனை தினசரி பார்வையிடுவதுடன் பின்பற்றுவது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளது. இதுதான் உடல்பருமன் குறைப்பில் முதல் நடவடிக்கையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்தி உள்ளது.