Friday, July 30, 2010

உலகின் முதல் விமானியில்லா போர் விமானம் !: கண்டம் விட்டு கண்டம் பறக்கும்.

லண்டன்: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.
'தரானிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை விமானத்தை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இன்று வெளியுலகுக்கு முதன்முறையாகக் காட்டியது.
எதிரி நாட்டு ரேடார்களி்ல் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை இயக்க விமானிகள் தேவையில்லை. தரையில் இருந்தவாறு ரேடியோ காண்டாக்ட் மூலம், விமானத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தலாம். ஏவுகணைகளை வீசலாம், குண்டுகளை வீசித் தாக்கலாம்.
விமானத்தில் உள்ள கேமராக்கள் உதவியோடு தரைக் கட்டுப்பாட்டு அறையின் திரையில் விமானத்தின் பாதையை தீர்மானிக்கலாம், மாற்றலாம். விமானம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை உடனுக்குடன் அறியலாம். தாக்க வரும் விமானத்தை, ஏவுகணையை எதிர்த்து எவுகணையை செலுத்தலாம்.
விமானியின் துணை இல்லாமலேயே, மிக நீண்ட தூரம், கண்டம் விட்டு கண்டம் கூட செல்லும் திறன் வாய்ந்த இந்த விமானம் போர் விமானங்களின் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இதுவரை ஆளில்லா உளவு விமானங்கள் தான் போர் முனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் சமீப காலமாக ஏவுகணைகளையும் பொறுத்தி அவ்வப்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் குண்டுவீ்ச்சையும் நடத்தி வருகிறது அமெரிக்கா . ஆப்கானிஸ்தான் ராணுவத் தளங்களில் இருந்து கிளம்பும் இந்த விமானங்களை அமெரிக்காவில் இருந்தபடி பாதுகாப்புத்துறையினர் கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் முழுக்க முழுக்க ஆளில்லாமல் இயங்கும் இந்த 'தரானிஸ்' போர் விமானத்தையே இங்கிலாந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'தரானிஸ்' என்றால் இடியைக் குறிக்கும் கடவுளின் பெயராம்!

பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன.

அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (வயது 34). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சல் குரோமர் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆனால் 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் இருந்தன. அதாவது ஏஞ்சலுக்கு 2 கர்ப்பபை இருந்துள்ளது. இரண்டிலும் கர்ப்பமாகி உள்ளார்.
இந்த கர்ப்பம் ஒரே நேரத்தில் ஏற்படவில்லை. வெவ்வேறு நேரத்தில் அவர் கர்ப்பமாகி உள்ளார்.
பெண்களுக்கு 50 லட்சம் பேரில் ஒருவருக்கு இதே போல கர்ப்பபை இருக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் இதுவரை 100 பெண்களுக்கு இதேபோல இரட்டை கர்ப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் வளர்வதாலும், வெவ்வேறு நேரத்தில் கர்ப்பமாகி இருப்பதாலும் குழந்தை வளரும்போது இதில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே என்ன செய்யலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

“மூளையை “ஸ்கேன்” செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்” ஆய்வில் தகவல்

மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால. திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும்.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டார்.

பூமியைப் போன்ற 140 கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்!

அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த புதிய சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy) அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்வெளிக் கலம் செயல்பட ஆரம்பித்து 6 வாரம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளை நடத்தி சாதனை படைத்துள்ளது.
நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள இந்த exoplanets என்றழைக்கப்படும் சூரிய மண்டலங்களில் உள்ள 140 கிரகங்கள் நிலம், நீருடன் பூமியைப் போன்றே உள்ளன. உயிர்கள் உருவாகத் தேவையான நீர் உள்ளதால் இங்கு அடிப்படை உயிரினங்கள் இருக்காலம் என்று கருதப்படுகிறது.
நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரத்திங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உயிரினங்கள் வாழ சாத்தியமான கிரங்களாக இருக்கலாம் என்று கெப்லர் விண்வெளி்க் கலத்தை அனுப்பிய ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி் விண்வெளி ஆய்வுப் பிரிவின் தலைவரான பேராசிரியர் டிமிடார் சசலேவ் தெரிவித்துள்ளார்.
இந்த கெப்லர் விண்கலம் ஓராண்டுக்கு முன் ஏவப்பட்டது. ஆனால், கடந்த மாத மத்தியில் தான் பால்வெளி மண்டத்தின் பகுதியை எட்டிப் பிடித்து தனது ஆய்வைத் தொடங்கியது.
பால்வெளி மண்டலத்தில் உளள சிக்னஸ், லைரா, டிராகோ நட்சத்திர மண்டலங்களில் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் சுமார் 1 லட்சம் நடத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த விண்கலம், அதன் ஒளி அளவில் ஏற்படும் மாற்றங்களை தனது 95 மெகா பிக்சல் கேமராக்கள் உதவியோடு பதிவு செய்து, பல்வேறு அலைவரிசைகளில் பிரித்து ஆய்வு செய்து, நாஸாவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ள பூமியைப் போன்ற கிரகங்களில் CoRoT - 7b மற்றும் Wasp-17b ஆகியவை முக்கியமானவை. இவை பூமியோடு மிகவும் ஒத்துள்ளன. இதில் CoRoT - 7b பூமியை விட 5 மடங்கு பெரியது. Wasp-17bயின் விட்டம் 2 லட்சம் கி.மீயாகும் (பூமியின் விட்டம் 12,000 கி.மீ தான்).
நமக்கு பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஜோகானஸ் கெப்லரின் மூன்றாவது விதியின் அடிப்படையில் தான் இந்த விண்கலம் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் தான் இதற்கு கெப்லர் வி்ண்கலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த இந்த கணித மேதை, கண்பார்வைக் குறைவுள்ளவராக இருந்தும், கிரகங்களின் இயக்கம் குறித்த கணக்கீட்டை 1960களில் தனது 3 விதிகளில் அடக்கிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கெப்லர் விண்கலத்தின் வாழ்நாள் 4 ஆண்டு காலமாகும்.

சீனாவில் 110 கோடி பேரிடம் டெலிபோன்கள்.



சீனாவின் மக்கள் தொகை 130 கோடி ஆகும். இவர்களில் 110 கோடி பேரிடம் டெலிபோன் இருப்பதாக தெரியவந்து உள்ளது. டெலிபோன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் முடிய உள்ள 5 மாதங்களில் டெலிபோன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 110 கோடி ஆனது.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில் 4 கோடியே 8 லட்சம் டெலிபோன்கள் அதிகரித்து உள்ளன. இந்த கால கட்டத்தில் `லேண்டுலைன்’ போன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 78 லட்சம் குறைந்து 30 கோடியே 60 லட்சம் ஆகவும், மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 85 லட்சம் அதிகரித்து 79 கோடியே 60 லட்சம் ஆனது.
இணையதளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 11 கோடியே 30 லட்சம் ஆகும்.

100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தது

அண்மையில் அமெரிக்க உளவுத்தகவல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம்.
தற்போது த பைரட் பே என்ற இணையத்தளத்தில் 100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருங்கே திரட்டி தரவிறக்குவதற்கேற்ற வகையில் வெளியிட்டுள்ளனர்.
இவ்வளவு தகவல்களையும் வெளியிட்டவர் thepiratebay.org இணையத்தளத்திற்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும்
Ron Bowes என்பவரே ஆவார்.
பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங்க் மூலமாக தனது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்காதவர்களிடமிருந்தே அவர்களது தகவல்களை திரட்டியதாக Ron Bowes தெரிவித்தார் எனவும் இதற்காக விஷேட கணனி நிரலிகளை உருவாக்கி அதைக்கொண்டு எல்லா பேஸ்புக் புரொவைலையும் ஸ்கான் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை பிரைவசி செட்டிங்க் மூலம் மாற்றங்கள் செய்து பாதுகாப்பாக வைக்காதவர்கள் இனிமேல் மாற்றியும் பலனில்லை என்றும் தெரியவருகிறது.
இந்த குற்றச்சாட்டுக்களை பலமாக மறுத்த பேஸ்புக் இவ்வாறு இணையத்தில் கசிந்த தகவல்கள் ஏற்கனவே ஆன்லைனில் இருப்பவைதான் என்று தெரிவித்துள்ளது.
தெரிந்த நண்பரின் தகவலை வைத்து பேஸ்புக்கில் தேடும்போது கிடைக்க கூடிய தகவல்களே இவை என்றும் பேஸ்புக் தெரிவித்தது. அண்மையில் தான் பேஸ்புக் சுமார் அரை பில்லியன் பாவனையாளர்களை எட்டியது.