Friday, June 17, 2011

ஃபேஸ்புக் -எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை

 கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம், இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.
அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளி விடுகிறார்கள். ஆர்வத்தில் அலைமோதும் இளைய தலைமுறையினர்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும், இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும் போது குறிப்பாக பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை எந்த மாதிரியான விடயங்களில், எது எதை தெரிவிக்கலாம், எவற்றை தெரிவிக்கக்கூடாது. என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.
நமது சொந்த புகைப்படம் (மார்ஃபிங்கில் மாற்றப்படும் ஆபத்து) உள்பட சில வகையான புகைப்படங்களை நமது வலைப்பக்கத்தில் ஏற்றுவது ஆபத்தாக முடியலாம்.யாராவது அவதூறாக பேசலாம் அல்லது ஏதாவது குற்றத்திற்கோ அல்லது அதைவிட மோசமான நிகழ்வுகளுக்கோ ஆட்பட நேரிடலாம்.
"டேட்டா மைனிங்" (Data Mining)  என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவை ஃபேஸ்புக்கை துளாவி நமது பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை எடுத்துவிடும். அப்படி கிடைக்கும் விவரங்கள் கிரிமினல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தங்கக்கட்டிக்கு சமமானவை" என்கிறார் பிரபல தகவல் தொழில்நுட்ப நிபுணரான டேவ் ஒயிட்லெக்.
எனவே பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்ககூடாது. இந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ள நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் இணைய பயன்பாட்டின்போது "பாதுகாப்பு கேள்விகள்" - security questions - , கடவுச்சொல் - password - ஆக கேட்கப்படுபவற்றில் மேற்கூறியவைதான் முதன்மை பங்காற்றுகிறது.
எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளலாம்.
அதேப்போன்று, வங்கி விண்ணப்பங்கள், இணையத்தின் மூலமான வங்கி பண பரிவர்த்தனை போன்றவற்றில் நீங்கள் யார் என்பதன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விகளில்,உங்களது தாயாரின் முதல் பெயர் என்ன என்பது கேட்கப்படுகிறது.
மேலும் நீங்கள் முதன் முதலில் படித்த பள்ளியின் பெயரும் கேட்கப்படுவது வழக்கமாக உள்ளது.
எனவே இத்தகைய விவரங்களையும் தெரிவிக்காமல் தவிர்ப்பது நல்லது.
அவ்வாறு செய்வது நமது அடையாள திருட்டை தவிர்க்க வைப்பதோடு, கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடமிருந்தும்-நம்மை-காப்பாற்றும்.
மேலும் நீங்கள் உங்களது ஃபேஸ்புக் தளத்தில் உங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தால், " அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருக்கமாட்டேன்..., 2 ஆம் தேதி ஊருக்கு செல்கிறேன்; திரும்பி வர 10 நாட்கள் ஆகும்..." என்றெல்லாம் தெரிவிக்காதீர்கள்.
இப்படி தகவல்களை உளறிக்கொட்டுவது திருடர்களையும், கொள்ளையர்களையும் நாமே வெற்றிலை பாக்கு வைத்து நமது வீட்டிற்கு கொள்ளையடிக்க வர அழைப்பதற்கு சமமாகிவிடும்.
மேலும் சாதி, மதம், இனம் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதோ அல்லது சட்டவிரோத புகைப்படங்களை போடுவதோ கூடாது. அவ்வாறு செய்வது உங்களது வாழ்க்கைக்கே ஆபத்தாகக் கூட போய்விட வாய்ப்புள்ளது.
மேலும் நமது தொலைபேசி எண்களை குறிப்பிடுவதால், அதை வாங்குங்கள்...இதை வாங்குங்கள், லோன் தருகிறோம், மருத்துவக் காப்பீடு போடுங்கள்... என்றெல்லாம் வரும் தொ(ல்)லைபேசி அழைப்புகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
அத்துடன் இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் அதிகமாகி வருகிறது. அப்படி இருக்கையில் நம்மை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் தளத்திலிருந்து சேகரித்துக் கொண்டு, நமது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதோ அல்லது வெளியில் தனியாக செல்லும் போதோ நம்மை பற்றிய விவரங்களை கூறி, நான் உனது பெற்றோருக்கு தெரிந்தவன் தான் என்பது போல் காட்டிக்கொண்டு நமது குழந்தைகளை கடத்தவும் வாய்ப்புண்டு.
எனவே ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களது பெயரை தவிர, உங்களைப்பற்றிய வேறு எவ்வித அந்தரங்க தகவல்களையும் தெரிவிக்காதீர்கள்!

உலகில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில்

உலகளவில் பல நாடுகளில், பலதரப்பட்ட துறைகளில் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அயல்நாடுகளில் பணிபுரிவோர், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் பணம் அனுப்பி வருகின்றனர்.
வெளிநாடுகளில் பணிபுரிவோர், தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வரும் பணம் குறித்து உலக வங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. 'இடம் பெயர்ந்தோர் மற்றும் பணமளிப்பு விவரம்' என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ளோர், தங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆண்டுதோறும், இந்தியர்கள், தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவது அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாய்நாட்டிற்கு 5,500 கோடி டாலர் (2 லட்சத்து 53ஆயிரம் கோடி ரூபாய்) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய ஆண்டு 4,960 கோடி டாலராக (2 லட்சத்து 28ஆயிரத்து 160 கோடி ரூபாய்) இருந்தது.இதில், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், மஸ்கட்,ஓமன் நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
இந்நாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் தாயகத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு 1,104 கோடி டாலர் (50ஆயிரத்து 784 கோடி ரூபாய்) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2009ம் ஆண்டில் 940 கோடி டாலராக (43ஆயிரத்து 240 கோடி ரூபாய்)இருந்தது.துபாயில் உள்ள யூ.ஏ.ஈ எக்ஸ்சேன்ஜ் நிறுவனம், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா கூட்டுறவு கழகத்தை சேர்ந்த நாடுகளின் அன்னியச் செலாவணி பரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான திர் குமார் ஷெட்டி கூறுகையில்,' அயல்நாட்டு பணியாளர்கள், சென்ற 2010ம் ஆண்டில் 2,500 கோடி - 3,000 கோடி டாலர் (ஒரு லட்சத்து 15ஆயிரம் கோடி ரூபா-ஒரு லட்சத்து 38ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு தாய்நாட்டிற்கு பணம் அனுப்பியுள்ளனர்' என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றும் அயல் நாட்டினர், கடந்த 2010ம் ஆண்டு தங்கள் தாயகத்திற்கு 1,054 கோடி டாலர் (48ஆயிரத்து 484 ரூபா) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2009ம் ஆண்டு 951கோடி டாலராக (43ஆயிரத்து 746 கோடி ரூபாய்) இருந்தது. இந்த வளர்ச்சியை, கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டின் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். கட்டுமானம் மற்றும் அது சார்ந்த துறைகளைத் தவிர்த்து, வணிகம், விருந்தோம்பல் மற்றும் ”சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இது, அயல்நாட்டவருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க துணைபுரிவதாக உள்ளது என, ”திர் குமார் ஷெட்டி மேலும் கூறினார்.