Saturday, July 20, 2013

100 ஆண்டுகளின் பின் சூரிய ஒளியை தரிசிக்கும் 'ருஜூகான்' மக்கள்

(TM) சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெறவுள்ளது.

நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது.

குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று சூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

ருஜூகான் நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து கடந்த ஐந்து வருடங்களாகவே திட்டமிடப் பட்டு வந்தநிலையில், தற்போது சரியான ஒரு மாற்றுத் தீர்வு கண்டறியப் பட்டுள்ளது.

அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரிய வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலம், நகரின் மத்தியப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது.

இத்திட்டம் கடந்த முதலாம் திகதி முதல் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தே தற்போது சூரிய ஒளியைப் பெறுகின்றனர்.