Thursday, March 29, 2012

நோக்கியாவின் எச்சரிக்கை!


பன்னாட்டளவில் மொபைல் போன்களைத் தயார் செய்து விற்பனை செய்துவரும் நோக்கியா நிறுவனம், தான் எந்த லாட்டரியும் நடத்தவில்லை என அறிவித்துள்ளது. மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட இதன் அறிக்கையில், பல நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் "நோக்கியா லாட்டரியில்' பங்கு கொண்டதாகவும், அதன் முடிவுகளை எதிர் நோக்கி இருப்ப தாகவும், பல இணைய மையங்களில் எழுதி உள்ளனர். யாருக்காவது முடிவு தெரிந்தால், உடனே தெரிவிக்கும்படி தங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்ட நோக்கியா நிறுவனம், நோக்கியா இதைப் போல எந்த லாட்டரியும் நடத்தவில்லை என்றும், இது போல நோக்கியாவின் நிறுவன இணையதளத்தில் இருந்து வருவது போலக் கிடைக்கும் மின்னஞ்சல் செய்திகள் தேவையற்ற பொய்ச் செய்திகள் என நோக்கியா அறிவித்துள்ளது.
இது போல வரும் மின்னஞ்சல் செய்திகளைப் பெறுபவர்களிடம், அவர்கள் பெயர்கள் லாட்டரியில் சேர்க்கப்பட பெயர், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கேட்டுவிட்டுப் பின்னர், ஒரு சிறிய தொகையினை இன்னொரு வங்கிக் கணக்கில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதனைக் கண்ட பலர், கேட்கப்படும் பணம் குறைவாக உள்ளதாலும், லாட்டரி பரிசு எக்கச்சக்கமாக இருப்பதாலும், போட்டுத்தான் பார்ப்போமே என்று எண்ணி, தங்கள் வங்கி அக்கவுண்ட் தகவல்களைத் தந்து பின்னர் பணத்தையும் செலுத்துகின்றனர்.
நோக்கியா இது போன்ற ஆசைத் தூண்டுதல்களுக்கு பலிகடா ஆகாதீர்கள் என்று தன் வாடிக்கை யாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது போல மின்னஞ்சல் அனுப்புபவர்கள், உங்களிடமிருந்து பெறும் தனிப்பட்ட தகவல்களைக் கூடத் தங்கள் மோசமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் எனவும் நோக்கியா அறிவுறுத்தி யுள்ளது. நோக்கியா மட்டுமின்றி, வேறு எந்த ஒரு தனிநபர் அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களின் பெயர்களில் இது போல திடீர் பணம் கிடைக்கும் என்று கேட்டு தகவல்களைத் திருடும் மின்னஞ்சல்களை உடனே அழித்துவிடும்படியும் நோக்கியா கேட்டுக் கொண்டுள்ளது.