Thursday, December 30, 2010

சிறுநீரகத்தில் இருந்த 1,72,155 கற்களை அகற்றி சாதனை

 வைத்திய உலகில் ஆச்சரியம்.
நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்த 1,72,155 கற்களை அகற்றி முன்னர் வைத்திய நிபுணர் Nashik என்பவரால், 14,098 சிறு நீரக கற்களை  அகற்றி நிகழ்த்தப்பட்ட பழைய சாதனையை முறியடித்து, மகாராஷ்டிர டாக்டர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ராவன்டாலே பாட்டீல். சிறுநீரக நோய் சிகிச்சை நிபுணரான இவர் இன்ஸ்டிடியூட் ஆப் யூராலஜி என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இவரிடம் 45 வயதுடைய தன்ராஜ் வாடிலே என்பவர் அடிவயிறு வலிப்பதாக கூறி, சிகிச்சைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏராளமான சிறு கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்ற டாக்டர் பாட்டீல் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி, தன்ராஜுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, சிறுநீரகத்தில் இருந்து மொத்தம் 1,72,155 சிறிய கற்கள் நான்கு மணி நேர சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டன. இந்த கற்கள் அனைத்தும் நோயாளியின் ஒரு சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை சாதனையாக கருதி, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய அனுப்பி வைத்தார் டாக்டர் பாட்டீல். அவரது சாதனையை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். பாட்டீல்  கூறுகையில், ‘கின்னஸ் சாதனை பதிவு அதிகாரிகளிடம் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.’ என்றார்.
மேலதிக தகவலுக்கு.....
http://www.themedguru.com/20101116/newsfeature/indian-doctor-removes-172-155-kidney-stones-single-patient-86141890.html

தென்கொரியா பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் “ரோபோ”க்கள்.

தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்டுபாடிக் கொண்டும், கை, கால் மற்றும் தலையை அசைத்த படி நடனமாடிய படியும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் வசதியும் இதில் உள்ளது. தொடக்கத்தில் தென்கொரியாவில் உள்ள தேகு” என்ற இடத்தில் உள்ள 21 தொடக்கப்பள்ளிகளில் இந்த “ரோபோ”க்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளில் சுமார் “30 ரோபோக்கள்” இது போன்று ஆங்கிலம் கற்றுத் தருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெண் ஆசிரியைகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர்.
ஆங்கில பாடம் பிலிப் பைன்ஸ் ஆசிரியைகளின் குரல் டேப்பில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இது தங்களுக்கு நல்ல அனுபவமாக இருப்ப தாக ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம், குழந்தைகளும் மிகவும் அன்புடனும், ஆர்வமுடனும் ஆங்கில பாடம் கற்கின்றனர். இது போன்று தென்கொரியா முழுவதும் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி.வீரகேசரி.