Saturday, September 17, 2011

நெற்றிக்கண்ணுடன் பிறந்த குழந்தை!

சென்னை : சென்னையில் நெற்றிக்கண்ணுடன் பிறந்த 5 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த இக்குழந்தையின் உடல் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் எனத்தெரிகிறது.
மதுரவாயலை சேர்ந்தவர் சத்யராணி(24). ஐந்து மாத கர்ப்பிணியான இவர் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பமீதா, உமாசாந்தி ஆகியோர் பரிசோதனை செய்தனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் குழந்தை ஒருவித அசைவுமின்றி இருந்தது.
இதையடுத்து, உடனடியாக குழந்தை வெளி கொண்டுவர சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று இரவு அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இடதுபுறம் ஒரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணும் இருந்தது. ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்கள் இருந்தன. மூக்கு இல்லை. இந்த குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் கீதாலட்சுமி கூறுகையில், ‘‘லட்சத்தில் ஒருவருக்கு இதுபோன்ற குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சொந்தத்தில் திருமணம் செய்வதாலும், டாக்டர்களின் ஆலோசனை இன்றி மருந்துகள் சாப்பிட்டாலும் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது.
21 வாரங்களே ஆன இந்த குழந்தைக்கு அனைத்து உறுப்புகளும் இருந்தாலும், சுவாசிக்க மூக்கு இல்லாததால் இறந்து விட்டது. கர்ப்பம் தரித்த பெண்கள் 3 மற்றும் 5வது மாதம் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த குழந்தையின் உடல் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்’’ என்றார்.

வல்லரசின் வறுமை

பேர தேசம் என்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த அமெரிக்காவில் ஏழ்மை வேகமாக பரவுகிறது என்று தேசிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. சென்ற ஆண்டில் மட்டும் 26 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே விழுந்திருக்கிறார்கள் என அதிர வைக்கிறது புள்ளிவிவரம். 4 கோடியே 62 லட்சம் அமெரிக்கர்கள் குடும்பம் நடத்த வழி தெரியாமல் ஏழ்மையில் தவிக்கிறார்களாம். அந்த நாட்டின் ஜனத்தொகை 31 கோடி. அதில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். 15 சதவீதத்துக்கு மேல். 

அரசின் கட்டுப்பாடுகள் இல்லாத தாராளமய பொருளாதாரம் தான் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு காரணமாக போற்றப்பட்டது. அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கும் வித்திட்டது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் உணர நேர்ந்தது. அப்போது தொடங்கிய வேலை இழப்பு இன்றுவரை வேகம் குறையவில்லை. அங்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலான கம்பெனிகள் இந்தியாவுக்கு பணிகளை மாற்றுவதாக ஏற்கனவே சலசலப்பு இருந்தது. சென்ற ஆண்டில் ஏறத்தாழ 9 கோடி அமெரிக்கர்கள் ஏதோ ஒரு கட்டத்திலாவது வேலையின்றி அல்லாடினர் என்று அரசு கணக்கிட்டுள்ளது. 

ஆள் குறைப்பு செய்த கம்பெனிகள் சம்பள உயர்வையும் நிறுத்தி வைத்தன. விலைகளும் கட்டணங்களும் உயரும் போது வருமானம் குறைந்ததால் தனிநபர் கடன் அதிகரித்தது. வேலையிழப்புக்கு அடுத்த வில்லனாக வந்திருப்பது மருத்துவ செலவு. பணக்காரர்கள் மட்டுமே தாங்க முடியும். எனவேதான் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க ஒபாமா போராடுகிறார். 

அநேக நாடுகளில் நடப்பது போலவே அங்கும் மேல் தட்டு மக்களின் வருமானம் தொடர்ந்து கொழிக்கிறது. மேலே உள்ள 10 சதவீதம் பேரின் சராசரி வருவாய் 1,38,900 டாலர். கீழே உள்ள பத்து சதத்தின் சராசரி வருவாய் 11,900 டாலர். ஐம்பது சத மக்களின் வருமானம் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில் நிற்கிறது.


மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். திருமணம் செய்ய முடியாமலும் குடும்பம் அமைக்க முடியாமலும் திணறுகின்றனர். இதுவரை கண்டிராத சமூக பிரச்னைகள் வெடிக்கும் அபாயம் தெரிகிறது. உலகை ஆள விரும்பிய வல்லரசின் நிலை அனைத்து நாடுகளுக்கும் பாடமாக மாறியிருக்கிறது. யாருக்கெல்லாம் அதை படிக்க மனம் இருக்கிறது?