Tuesday, April 3, 2012

சவுதி இளவரசர் "ட்விட்டரில்' முதலீடு

சமூக வலைத் தளமான "ட்விட்டரில்', சவுதி அரேபிய இளவரசர் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார். சமூக வலைத் தளமான "ட்விட்டர்' , 2006ல் துவக்கப்பட்டது. உலகளவில் தற்போது இந்த வலைத் தளத்தை 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் அல்சவுத், "ட்விட்டரில்' 300 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக, அவரது கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களாக இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முதலீடு நடந்துள்ளது. அரபு புரட்சியில் "ட்விட்டர்' மற்றும் "பேஸ்புக்' சமூக வலைத் தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. சிரியாவில் வெளிநாட்டு ஊடகங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்நாட்டு மக்கள், அங்கு நடப்பதை இந்த இரு வலைத் தளங்களின் வழியாக வெளியுலகுக்கு கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கிங்டம் ஹோல்டிங் நிறுவன இயக்குனர் அகமது ஹலாவானி கூறுகையில்,"இந்த சமூக வலைத்தளங்கள் வரும் ஆண்டுகளில், ஊடக உலகத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்து விடும் என நம்புகிறோம்' என்றார்.