Wednesday, August 4, 2010

பாக்கு மென்றால் புற்றுநோய்


பாக்கு தோப்பு
பாக்கு தோப்பு
ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது.
தாய்வானின் கிராமப்புறங்களில் பாக்கு மரம் ஒரு பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. பெருமளவில் பாக்கு பயிர் செய்யப்பட்டதை தொடர்ந்து, தாய்வான் மக்களுக்கு பாக்கு மெல்லும் பழக்கம் அதிகளவில் ஏற்பட்டது. தாய்வானில் இருக்கின்ற ஆண்களில் 14 சதவீதம் பேர் பாக்கு மெல்கின்றனர். வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு பாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2100 பேர் வாய் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். தாய்வானில் ஆண்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக வாய் புற்றுநோய் பார்க்கப்படுகிறது.
பாக்கு உபயோகப்படுத்துவதை தடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் கட்டுமான பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், மீனவர்கள் போன்றவர்களிடம் பாக்கு பிரபலமாக இருக்கிறது. கேஃபைன் போன்றே பாக்கும் தங்களை விழித்திருக்க வைக்க உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
அரசாங்கம் தாங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள், கல்விசாலைகள், தேவாலயங்கள், கிராமங்கள் போன்றவற்றில் பாக்குக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பழக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது.
ஆனால் வாய் புற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைய கொஞ்சம் காலம் ஆகும். ஏனென்றால் 1970, 1980 களில் பாக்கு மெல்ல ஆரம்பித்தவர்களுக்கு இப்போது புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.