Saturday, March 17, 2012

இந்தியாவின் 2வது பெண் விஞ்ஞானி


நவீன செயற்கைக்கோள் தயாரித்து தமிழக பெண் விஞ்ஞானி சாதனை: விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது
இந்தியாவின் விண்வெளி மற்றும் அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பல சாதனைகள் படைத்து தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்தார். அவரைத் தொடர்ந்து, மேலும் பல தமிழக விண்வெளி விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் பறக்க விட்டு உலக அளவில் சாதனை நிகழ்த்தியது. இந்த சந்திராயன் ராக்கெட் தயாரித்தவர் அதன் திட்ட இயக்குனர் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மயில்சாமி. இதற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. 


இவர்கள் வரிசையில் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் விஞ்ஞானியான வளர்மதி சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த வளர்மதி இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். 


இந்தியா தற்போது அதிநவீன மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங்சேட்டி லைட் என்ற செயற்கை கோளை உருவாக்கி உள்ளது. இதனை தயாரித்தவர் தமிழக பெண் விஞ்ஞானி வளர்மதி. இவரிடம் செயற்கைக்கோள் தயாரிப்புக்கான திட்டப்பணியை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதையடுத்து அதன் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி வளர்மதி பொறுப்பு ஏற்றார். 


அவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் இரவு பகலாக உழைத்து செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இதற்கு ரிசாட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் ரிசாட்-1 செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. 


அனேகமாக மார்ச் 15-ந்தேதிக்கு பிறகு செலுத்த ஏற்பாடு நடப்பதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 


செயற்கைக்கோள் தயாரிப்பு பற்றி பெண் விஞ்ஞானி வளர்மதி கூறியதாவது:-
நான் கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன். 1981-ல் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் என்ஜினீயர் ஆகி இஸ்ரோவில் பணிபுரிந்தேன். ரிசாட்-தயாரிப்பு திட்ட இயக்குனராக இருந்த விஞ்ஞானி தியாகி ஓய்வு பெற்றதும் அதன் திட்ட இயக்குனர் பொறுப்பை நான் ஏற்றேன். 


இவ்வாறு அவர் கூறினார்.

2-வது பெண் இந்தியாவின் செயற்கைக்கோள் தயாரித்த 2-வது பெண்மணி வளர்மதியாவார். முதலாவது பெண் விஞ்ஞானி டி.கே.அனுராதா. இவர் ஜி சாட்-12 என்ற செயற்கைக்கோள் தயாரித்தார். அது கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.