Saturday, September 17, 2011

நெற்றிக்கண்ணுடன் பிறந்த குழந்தை!

சென்னை : சென்னையில் நெற்றிக்கண்ணுடன் பிறந்த 5 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த இக்குழந்தையின் உடல் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் எனத்தெரிகிறது.
மதுரவாயலை சேர்ந்தவர் சத்யராணி(24). ஐந்து மாத கர்ப்பிணியான இவர் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பமீதா, உமாசாந்தி ஆகியோர் பரிசோதனை செய்தனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் குழந்தை ஒருவித அசைவுமின்றி இருந்தது.
இதையடுத்து, உடனடியாக குழந்தை வெளி கொண்டுவர சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று இரவு அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இடதுபுறம் ஒரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணும் இருந்தது. ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்கள் இருந்தன. மூக்கு இல்லை. இந்த குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் கீதாலட்சுமி கூறுகையில், ‘‘லட்சத்தில் ஒருவருக்கு இதுபோன்ற குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சொந்தத்தில் திருமணம் செய்வதாலும், டாக்டர்களின் ஆலோசனை இன்றி மருந்துகள் சாப்பிட்டாலும் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது.
21 வாரங்களே ஆன இந்த குழந்தைக்கு அனைத்து உறுப்புகளும் இருந்தாலும், சுவாசிக்க மூக்கு இல்லாததால் இறந்து விட்டது. கர்ப்பம் தரித்த பெண்கள் 3 மற்றும் 5வது மாதம் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த குழந்தையின் உடல் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.