Wednesday, July 14, 2010

பிளாஸ்டிகி

பிளாஸ்டிகி எனும் படகு ஒன்று கடந்த 21 .03 .2010 அன்று  தனது 20,000 கிலோமீட்டர் தூர பயணத்தை சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து ஆரம்பித்தது. இதிலென்ன ஆச்சரியம்? சாதாரண படகுதானே என்று எண்ணிவிடாதீர்கள்.
இது முழுக்க முழுக்க காலியான, வீசி எறியப்பட்ட பழைய பிளாஸ்டிக் போத்தல்களாலானது என்றால் ஆச்சரியமாக இல்லையா?
காலியான பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொருட்களால் சமுத்திரங்களில் பாரிய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இது பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு ஒன்று வித்தியாசமான கடல் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
'ரீசைக்லிங் 'என்று சொல்லப்படுகின்ற முறையில் பழைய பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து உருவாக்கப்பட்டது தான் இந்த பிளாஸ்டிகி.
12000க்கும் அதிகமான போத்தல்களை வரிசை வரிசையாக ஒட்டி ஒட்டி இதுபோன்ற இரண்டு மிதவைகளைக் கொண்ட பாய்மரப் படகுகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மீது ஏறி துணிச்சல்மிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு ஒன்று பசிபிக் கடலைக் கடக்கவுள்ளது. இவர்களின் பயணமே கடந்த 21 .03 .2010 அன்று ஆரம்பமானது.
இந்தப் படகுகள் கிட்டத்தட்ட முற்றிலுமாகவே உபயோகப்படுத்தப்பட்டு வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து மீளுருவாக்கப்பட்ட உபகரணங்களாலானவை.
இவற்றில் பயணிப்பவர்கள் ஒரே நீரைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதற்கான வசதியும், உடற்பயிற்சிக்கான சைக்கிளை மிதிக்கும்போது அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் இறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் கடலை ஒட்டி வாழும் பறவைகளையும் கடல் வாழ் உயிரினங்களையும் ஆயிரக்கணக்கில் கொன்றுவருகிறன.
தவிர கடலில் விடப்படுகின்ற பிளாஸ்டிக் குப்பைகள் ஒன்று சேர்ந்து பெரும் பெரும் திட்டுக்களாகச் சமுத்திரத்தில் பல இடங்களிலும் மிதந்துகொண்டிருக்கின்றன. இவை ஒன்றாய்ச் சேர்ந்து 'குப்பைத் தீவு' உருவாகியிருக்கும் தகவல்களும் அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது,
நன்றி,வீரகேசரி.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.