Friday, July 30, 2010

உலகின் முதல் விமானியில்லா போர் விமானம் !: கண்டம் விட்டு கண்டம் பறக்கும்.

லண்டன்: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.
'தரானிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை விமானத்தை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இன்று வெளியுலகுக்கு முதன்முறையாகக் காட்டியது.
எதிரி நாட்டு ரேடார்களி்ல் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை இயக்க விமானிகள் தேவையில்லை. தரையில் இருந்தவாறு ரேடியோ காண்டாக்ட் மூலம், விமானத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தலாம். ஏவுகணைகளை வீசலாம், குண்டுகளை வீசித் தாக்கலாம்.
விமானத்தில் உள்ள கேமராக்கள் உதவியோடு தரைக் கட்டுப்பாட்டு அறையின் திரையில் விமானத்தின் பாதையை தீர்மானிக்கலாம், மாற்றலாம். விமானம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை உடனுக்குடன் அறியலாம். தாக்க வரும் விமானத்தை, ஏவுகணையை எதிர்த்து எவுகணையை செலுத்தலாம்.
விமானியின் துணை இல்லாமலேயே, மிக நீண்ட தூரம், கண்டம் விட்டு கண்டம் கூட செல்லும் திறன் வாய்ந்த இந்த விமானம் போர் விமானங்களின் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இதுவரை ஆளில்லா உளவு விமானங்கள் தான் போர் முனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் சமீப காலமாக ஏவுகணைகளையும் பொறுத்தி அவ்வப்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் குண்டுவீ்ச்சையும் நடத்தி வருகிறது அமெரிக்கா . ஆப்கானிஸ்தான் ராணுவத் தளங்களில் இருந்து கிளம்பும் இந்த விமானங்களை அமெரிக்காவில் இருந்தபடி பாதுகாப்புத்துறையினர் கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் முழுக்க முழுக்க ஆளில்லாமல் இயங்கும் இந்த 'தரானிஸ்' போர் விமானத்தையே இங்கிலாந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'தரானிஸ்' என்றால் இடியைக் குறிக்கும் கடவுளின் பெயராம்!

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.