Monday, August 2, 2010

60 ஆண்டுகளுக்குப் பின்னர் அரியவகை தேவாங்கு.

'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்'
'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்'
இலங்கையில் முற்றாக அழிவடைந்துவருவதாக கருதப்படும் அரிய வகை விலங்கினமொன்று இன்னும் உயிர்வாழ்வதை நிழற்படமொன்றின் மூலம் ஆய்வாளர்கள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேவாங்கு வகையைச் சார்ந்த இந்த விலங்கினம் இலங்கையில் சுமார் 60 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக பார்வைக்கு கிட்டியுள்ளதாக கருதப்படுகின்றது.
முதிர்ச்சியடைந்த ஆண் விலங்கொன்று, இரவு வேளையில் மரக்கிளையொன்றில் கமராவை உற்று நோக்கியபடி அமர்ந்திருக்கும் காட்சியே இங்கு பதிவாகியுள்ளது.
குறுகிய கால்களையும் நீளமான ரோமங்களையும் கொண்டுள்ள இந்த விலங்கு 'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்' என்றழைக்கப்படும் மிக அரிய வகை தேவாங்கினமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டிலேயே அழிந்துவிட்டதாக கருதப்பட்டது
இலங்கையின் மலைகளை அண்டிய காட்டுப்பகுதிகளிலேயே வாழக்கூடிய இந்த தேவாங்கினம் தேயிலை மற்றும் பயிர்ச்செய்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த நூற்றாண்டிலேயே பெரும்பாலும் அழிவடைந்துவிட்டதாக கருதப்படுகின்றது.
ஆனால் லண்டன் விலங்கியல் சங்கம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த கூட்டு ஆய்வாளர்கள் குழுவொன்று, இரவு வேளைகளில் நடத்தியுள்ள நூற்றுக்கணக்கான தேடல்களின் பின்னர், தற்போது இந்த விலங்கினத்தின் இருப்பு ஆவண ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொனிக்கல் மலை, ஹோர்ட்டன் பிளேஸ் மற்றும் ஹக்கல ஆகிய மூன்று வெவ்வேறு மலைப்பிரதேசங்களில் மட்டுமே தற்போது உயிர்வாழக்கூடிய இந்தத் தேவாங்கு வகை உயிரினம் இடத்துக்கு இடம் மாறுவதில் பிரச்சனைகள் இருப்பதால், அவற்றின் எதிர்கால இருப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக ஆய்வுகளை நடத்திய குழுவின் தலைமை ஆய்வாளர் சமன் கமகே கூறுகிறார்

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.