Sunday, June 20, 2010

கணிதத்தில் அசத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்

கணிதம் என்றாலே சிலருக்கு பிடிக்காத ஒரு பாடப்பிரிவாக உள்ளது. அதேநேரம் கணிதத்தை புரியும் படி எளிய வகையில் போதித்தால், அதை விட ஒரு விருப்பமான பாடம் இல்லை என்று கூறலாம். திருப்பூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் - உமா மகேஸ்வரி தம்பதியின் மகனான விபுவிக்னேஷ்(11); கோத்தகிரியில் உள்ள ஒரு உறைவிடப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். இம்மாணவன், கணிதத்தில் சாதனை படைத்து வருகிறான்.
சென்னை, தரமணியில் நடந்த கணிதமேதை பி.கே.ஸ்ரீனிவாசன் ஐந்தாம் ஆண்டு நினைவாஞ்சலியில் விபுவிக்னேஷ் கணிதப் போட்டி நிகழ்ச்சி அரங்கேறியது. இதில், இரட்டை இலக்க எண்கள் எதைக் கூறினாலும், நொடியில் அதை பெருக்கி அதற்கான விடை கூறி, அரங்கத்தினர் பாராட்டுகளை பெற்றான்.

விபுவிக்னேஷின் கணித ஆர்வம் குறித்து அவனின் பெற்றோர் கூறியதாவது: விக்னேஷ், நான்காம் வகுப்பு கோடை விடுமுறையின்போது, உறைவிடப்பள்ளியில் இருந்து வீடு திரும்பினான். அப்போது, 500ம் வாய்ப்பாடு வரை கூறி எங்களை ஆச்சரியப்படவைத்தான். அப்போது தான் அவனுக்கு கணிதத்தின் மீது விருப்பம் உள்ளது தெரிந்தது.

அதன் பிறகு கணிதம் சம்பந்தமான புத்தகங்கள் வாங்கி கொடுத்தோம். தற்போது, இரட்டை இலக்க எண்ணகள் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ கொடுத்தாலும் அதை பெருக்கி நொடியில் விடை கொடுக்கிறான். அவனது விருப்பப்படி கணிதமேதை பி.கே.எஸ்., நினைவாஞ்சலி நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டோம். கணிதத்தில் அவன் சிறந்து விளங்க நாங்கள் பல்வேறு வகையில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

விக்னேஷ் கூறுகையில், "எனக்கு சிறு வயது முதலே கணிதம் என்றால் விருப்பம். தற்போது, இரட்டை இலக்க எண்களை பெருக்கி கூறுவேன். அடுத்து, மூன்று இலக்க எண்கணை பெருக்கி கூறுவதற்காக கற்று வருகிறேன். கணிதமேதை ராமானுஜர், பி.கே.ஸ்ரீனிவாசன் போல நானும் சிறந்து விளங்கவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளேன்' என்றான்.
Thanks To.........Dinamalar

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.